இலங்கையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய வெப்பநிலை வவுனியாவில் பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள...
இலங்கையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய வெப்பநிலை வவுனியாவில் பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த வெப்பநிலை 38.3 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நாட்டில் கடும் வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 1880ஆம் ஆண்டு வெப்பநிலைப் பெறுமானத்தை அளக்கத்தொடங்கிய காலத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை கடும்போக்கில் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச காலநிலை மையங்கள் கூறுகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டில் பதிவாகிய உலகின் அதிகூடிய வெப்பநிலைப் பெறுமானத்தின்பின்னர் தொடர்ச்சியாக கடந்த நான்காண்டுகளிலும் அதியுச்ச வெப்பநிலை பதிவாகிவருகிறது.
உலகில் நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றங்களில் இது மிகவும் மோசமான நிலையில் சென்றுகொண்டிருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.
கூடுதலாக மனித நடவடிக்கைகளே இதில் பாரிய பங்களிப்பைச் செய்வதாக கூறும் அவர், வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள காபனீரொக்சைட்டின் அளவும் மனிதன் வெளியிடும் மாசுக்களின் அளவும் செறிந்து காணப்படுவதே இந்த பாரதூரமான நிலையினைத் தோற்றுவித்துள்ளதாக கூறுகிறார்.
உலகில் வேகமாக இடம்பெற்றுவரும் காடழித்தல் செயன்முறையானது இயற்கையாகவும் செயற்கையாகவும் உண்டாவதால் காபனீரொக்சைட்டின் அடர்த்தி வளிமண்டலத்தில் அதிகரித்துவருகிறது. இது பச்சைவீட்டு விளைவுகளை உண்டுபண்ணுவதுடன் மழைக்கான சூழ்நிலைகளைக் குழப்பிவருகிறது.
எனினும் இனிவரும் ஆண்டுகளிலும் இந்த வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமேயானால் நிலைமை இன்னும் கட்டுக்கடங்காமல் போகுமென்று புவியியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இது மனித உடலியல்சார் நடத்தையில் மிகப்பெரும் தாக்கத்தை உண்டுபண்ணுமென விஞ்ஞானிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.


No comments