சாவகச்சேரி பொதுச் சந்தை வளாகத்தில் சந்தை உட்புறமாக போக்குவரத்து பாதைகளை அடைத்து வரி வசூலிப்பதற்கு ஏதுவாக கட ந்த புதன்கிழமை நள்ளிரவு வேள...
சாவகச்சேரி பொதுச் சந்தை வளாகத்தில் சந்தை உட்புறமாக போக்குவரத்து பாதைகளை அடைத்து வரி வசூலிப்பதற்கு ஏதுவாக கட ந்த புதன்கிழமை நள்ளிரவு வேளையில் நகரசபையினர் சந்தை வளாகத்தில் நாலாபுறமும் உள்ள போக்குவரத்து பாதைகளில் நிலத்தில் தூண்கள் போட்டு தடுத்துள்ளனர்.
இதனை அறியாத சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் சந்தைக்குள் வழமை போல் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் வந்த போது நகரசபையினரின் தடுப்பு தூண்களில் மோதி விழுந்து காயமடைந்ததுடன், சிலருடைய மோட்டார் சைக்கிளும் சேதமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நகர சபையினர் குறித்த தடுப்புத் தூண்களை நில மட்டத்தோடு வைத்திருப்பதனால் பலரும் அதனை கவனிக்காது தடுக்கி விழும் அபாயம் காணப்படுவதாகவும் ஆகவே தடுப்பு தூண்களுக்கு பதிலாக இலகுவாக அவதானிக்கக் கூடிய வகையில் நில மட்டத்தில் இருந்து உயரமாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பொதுச்சந்தை நட்டத்தில் இயங்குவதாகவும், 2019 தை மாதத்தில் இருந்து எதிர்வரும் பங்குனி மாதம் வரை இலாபம் ஈட்டாமல் தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் சந்தையை குத்தகைக்கு கொடுக்க வேண்டும் எனவும் சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சாவகச்சேரி நகர சபையினர் கடந்த முதலாம் திகதியில் இருந்து கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்தி இலாபம் ஈட்டுவதனை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
இலாபத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனிலும் நகர சபையினர் கவனம் செலுத்த வேண்டும். சாவகச்சேரி பொதுச்சந்தையை தினமும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments