கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழுள்ள நீவில் வயற் காணிகளில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளினால் விவசாயிகள் ...
கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழுள்ள நீவில் வயற் காணிகளில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீவில் வயற்காணிகள் 288 பேருக்கு 4 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இக்காணிகளில் விவசாய நடவடிக்கைகள் இடம் பெற்று வந்தன.
தற்போது சட்ட விரோதமான முறையில் அக்காணிகளில் மணல் அகழ்வுகள் இடம் பெற்று வருவதுடன் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போர் அச்சுறுத்தப்பட்டு வருகின் றனர்.
நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 25 இற்கும் மேற்பட்ட வயற்காணிகளிலேயே தற்போது மணல் அகழ்வு இடம் பெறுகின்றது.
வயற்காணிகளிலுள்ள மேல் மண்ணை வெட்டி அகற்றி விட்டு அதன் கீழுள்ள மணலையே அகழ்ந்து வருகின்றனர்.
இவ்விதம் வயற்காணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையால் நெற்செய்கையை முன்னெடுக்கும் விவசாயிகள் தமது தொழில்களை இழந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மணல் அகழ்வு இடம் பெற்ற வயற்காணிகள் தோண்டப்பட்டு குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
இது மாத்திரமன்றி மீளெழுச்சித்திட்டத்தினூடாக 1 1/2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட உருத்திரபுரம் குளக்கட்டின் வான் பகுதியிலுள்ள அணைக்கட்டு மண் அகழப்பட்டு அதன் கீழுள்ள மணலும் சட்ட விரோதமான முறையில் அள்ளப்படுகின்றது.
இவ்வாறாக சட்ட விரோதமான முறையில் அகழப்படுகின்ற மணல் உழவியந்திரங்களில் ஏற்றப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
தமது வயற்காணிகள் விமிகளால் சேதமாக்கப்படுவதாக விவசாயிகளால் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இவர் தலைமையில் உருத்திரபுரம் கமநல சேவை நிலையத்தலைவர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் குறித்த வயற்காணிகளை பார்வையிட்டுள்ளனர்.
இக்கிராமத்திலுள்ள சிலரின் ஆதரவுடன் இடம்பெறும் இச் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுக்க கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலர் கனியவளப் பிரிவினர் பொலிஸ் பிரிவினர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


No comments