அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் மொஹமட் கமெர் நிஸாம்டீன் பிணையில் விடுவிக்கப்படவு...
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் மொஹமட் கமெர் நிஸாம்டீன் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் அரசியல்வாதிகள் சிலரை கொலை செய்வதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையில் கடந்த மாத இறுதியில் நிஸாம்டீன் கைது செய்யப்பட்டிருந்தார்.
நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவரான 25 வயதுடைய நிஸாம்டீனின், உடைமைகளுடன் கைப்பற்றப்பட்டிருந்த குறிப்பேட்டில் காணப்பட்ட கையெழுத்து, அவருடையது அல்லவென நிபுணர்களின் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
நிஸாம்டீனின் உடைமைகளுடன் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் அவரது துணைப் பிரதமராக செயற்பட்ட ஜூலி பிஷப் ஆகியோரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அடங்கியிருந்தன.
இதன் காரணமாக கைது செய்யப்பட்ட நிஸாம்டீன் கடந்த நான்கு வாரங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலைமையின் கீழ், இந்த விவகாரத்தில் நிஸாம்டீன் நிரபராதி எனவும், அவரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் போராடி வந்தனர்.
கமர் மொஹமட் நிஸாடீனின் விடுதலை வலியுறுத்தி குடும்பத்தவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments