ரணில் விக்கிரமசிங்க வெல்வாரா இல்லையா என்பதற்கு அப்பால், எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துண...
ரணில் விக்கிரமசிங்க வெல்வாரா இல்லையா என்பதற்கு அப்பால், எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துணிச்சலோடு ஆதரித்தோம்.
என்றாலும் வழமையாக செய்கின்ற எமது மக்களுக்கான துரோகத்தனத்தையே இம்முறையும் சக தமிழ் அரசியல் தரப்புகள் செய்துவிட்டு, இன்று'''கறுப்பாடு ''அரசியலை முன்னெடுத்து வருகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இருண்டிருந்த ஒரு யுகத்தில், அதை சபித்துக் கொண்டிராமல், ஒரேயோரு விளக்காக இருந்து,இந்த நாட்டுக்கே ஒளி தருவதற்கு முன்வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை யாவரும் அறிவோம்.
நாம் சுயலாபம் கருதி பொது நோக்கை வெறுத்து அலையும் கூட்டம் அல்ல.பொது நோக்கு கருதி சுயலாபங்களை வெறுக்கும் நாட்டம் கொண்டவர்கள் நாம்.
நாம் வெல்லும் பக்கம் நிற்பவர்கள் அல்ல. நிற்கும் பக்கத்தின் வெற்றிக்காக உழைப்பவர்கள். அவரை இவரை நம்புவது என்பதற்கு அப்பால் கனிந்து வந்திருக்கும் சூழலை சரிவர பயன்படுத்தி எமது இலக்கை நாமே எட்டிவிட எம்மை நாமே நாம் முழுமையாக நம்புகிறோம்.
பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெல்வாரா இல்லையா என்பதற்கு அப்பால், எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துணிச்சலோடு ஆதரித்தோம்.
நாம் விரும்பியது போல் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக சிம்மாசனம் எறியிருக்கின்றார்.தனது சிம்மாசன உரையில் அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்வகட்சி அரசுக்கான அழைப்பை விடுத்துள்ளார். இது ஒரு அரிய வாய்ப்பு.. சகல தரப்புடனும் இணைந்து சக தமிழ் தரப்பும் இதை சரிவரப்பயன்படுத்த முன்வரவேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடக்கம், அதை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் உட்பட வரலாறெங்கும் இதுவரை காலம் எமக்கு கிடைத்த அறிய வாய்ப்புகள் யாவும் பன்றிகளுக்கு முன்னாள் போடப்பட்ட முத்தாகவே கடந்து போய் விட்டன.
இன்று கனிந்துள்ள அரிய வாய்ப்பையாவது சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து சரிவர பயன்படுத்த முன்வருமாறு சக தமிழ் தரப்பினருக்கும் மீண்டும் நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.
என்றாலும் வழமையாக செய்கின்ற எமது மக்களுக்கான துரோகத்தனத்தையே இம்முறையும் சக தமிழ் அரசியல் தரப்புகள் செய்துவிட்டு, இன்று கறுப்பாடு அரசியலை முன்னெடுத்து வருகின்றன.
புலித் தோல் போர்த்திய ஆடுகளாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்ற கறுப்பாடுகளும்,கறுப்பாடுகளான கறுப்பாடுகளும், கறுப்பாடுகளைத் தேடுவதாகக் கூறுகின்றன. இந்த கறுப்பாட்டு அரசியல் அநேகமாக அடுத்த ஏதாவது ஒரு தேர்தல் வரை மேய்ந்துகொண்டேயிருக்கும் என எமது மக்கள் முணுமுணுக்கின்றதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது என்றார்.


No comments