மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 19 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெட...
மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 19 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது.
2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் கடந்த காலங்களில் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து தருகின்றோம்.
2000.05.17 அன்று மாலை 5 மணி இருக்கும் ஒரு வெசாக் தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஒரு சைக்கிளில் உள்ள பெட்டியில் குண்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கச்செய்யும் படையினருக்கு அறிவிக்கப்பட்டும் அவர்கள் வருவதற்கு அரை மணிநேரம் ஆகிவிட்டது. அதற்கிடையில் குண்டு வெடித்து விட்டது.
இதன் பின்னர் வெசாக் பார்ப்பதற்காக வந்த ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுமியர்களை ஏற்றிவந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 10 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததாகவும் குறித்த சிறுவர்களின் இறப்பிற்கு காரணம் குண்டு வெடிப்புச் சம்பவம்தான் என்று இராணுவம் கூறியிருந்து.
ஆனால் சிறுவர்களின் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணம் குண்டு வெடித்ததன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த மோட்டார்சைக்கில் படையினரின் துப்பாக்கிச்சுடே என அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய சிறுவன்!
அன்றையதினம் சிறுவர்களை ஏற்றிவந்த ஆயர் இல்ல வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருந்து ஒரு சிறுவன் தப்பியதாகவும் அவன் குறித்த வாகனத்தில் இருந்து இறங்கி வீதியோரத்தில் இருந்த கால்வாயில் படுத்துக்கொண்டதாகவும் அதன் காரணமாக குறித்த சிறுவன் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாகவும் அவர் கூறினார்.
இராணுவ உயர் அதிகாரி பிரிகேடியர் சக்கி கருத்து!
சம்பவம் இடம்பெற்ற அடுத்தநாள் அருட்தந்தையை அழைத்துபேசிய பிரிகேடியர் சக்கி அவர்கள் பாதர் விடுதலைப்புலிகளின் குண்டு வெடித்ததில்தான் குழந்தைகள் உள்ளிட்ட அத்தனை பேரும் இறந்துள்ளார்கள் என்று கூறினார்.
அதனை மறுத்த அருட்தந்தை அவர்கள் இறந்தவர்கள் அனைவரினதும் உடலில் துப்பாக்கி ரவைகளினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதே பிரிகடியர் என்று கேட்டதற்கு அதை அவர் மறுத்ததாகவும்.
கச்சேரியில் பணியாற்றியவரை முட்டுக்காலில் வைத்து தலையில் சுட்ட இராணுவம்!
பிரிகேடியரிடம் அருட்தந்தை அவர்கள் மேலும் கூறியபோது,
மட்டக்களப்பு சன்முகாஸ் வியாபார நிலையத்தில் பொருட்கள் வாங்கிகொண்டு நின்ற கச்சேரியில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரையும் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனையும் கூட்டிக்கொண்டு சென்று முழங்காளில் வைத்து தலையில் சுட்டு கொன்றுள்ளீர்களே அதையும் குண்டுவெடிப்பில் இறந்ததாக சொல்கிறீர்களா என கேட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டேன் என்றார்.
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்!
17.05.2000 அன்று வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் உட்பட 19பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். அந்த 19பொதுமக்களும் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றே அரசாங்கம் அறிவித்தது.
அதனையே சகல ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருந்தன. அந்த சம்பவம் நடந்து காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது காயப்பட்டவர்களில் உடல்களில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து காயப்பட்டவர்கள் சிலரிடம் நேரடியாக பேசிய போது உண்மை தெரியவந்தது.
குண்டுத்தாக்குதல் நடந்த பின் பாதுகாப்பு கருதி கடை ஒன்றிற்குள் ஓடிச்சென்று பதுங்கியிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினரே தங்களை சுட்டதாகவும் தங்களுடன் இருந்த பலரும் அதில் கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் வானில் வந்து இறங்கிய போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
ஆனால் அரசாங்கத்தின் உத்தரவுப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என மரணச்சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மௌனமாக இருந்து விட்டனர்.



No comments