தமிழ் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததையடுத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட...
தமிழ் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததையடுத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இச்சம்பவம் மகளீர் தினத்தன்று இடம்பெற்றுள்ளது,
இது தொடர்பில் மேலும்.,
தமிழகம் கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (தொழிலாளி) சிந்து (வயது 26) தம்பதிகளுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து சிந்து கர்ப்பமான 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.
காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments