நீதிமன்றின் தீர்ப்பை பொருட்படுத்தாது எதேட்சாதிகாரமாக தொடர்ந்தும் செயற்பட்டு நாட்டை மேலும் அராஜகத்திற்குள் தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதியும்,...
நீதிமன்றின் தீர்ப்பை பொருட்படுத்தாது எதேட்சாதிகாரமாக தொடர்ந்தும் செயற்பட்டு நாட்டை மேலும் அராஜகத்திற்குள் தள்ளிவிடுவதற்கு ஜனாதிபதியும், மஹிந்த கும்பலும் முயற்சித்தால் அவர்களால் எதிர்பார்க்க முடியாத தோல்வியை பெற்றுக்கொடுப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை வி்டுத்துள்ளது.
இதற்காக நாட்டு மக்களை அணி திரட்டி வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள ஜே.வி.பி யின் தலைமை அலுவலகத்தில் டிசெம்பர் 3 ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த எச்சரிக்கையை வி்டுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்த வர்த்தமானி அறிவித்தல்கள் சிலவற்றுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, மஹிந்தவை பிரதமராக நியமித்தது மற்றும் அமைச்சரவை நியமனம் ஆகிய மூன்று வர்த்தமானி அறிவித்தல்களுக்கே நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றது. இதன்மூலம் ஜனாதிபதி சட்டத்தை மீறி செயற்படும் தலைவர் என்பது நிரூபணமாகியுள்ளதாக ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் எதேட்சாதிகாரமாக செயற்பட வேண்டாம் என மைத்ரிபால சிறிசேனவை வலியுறுத்திக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் ஜே.வி.பி யின் தலைவர் குறிப்பிட்டார்.
இதனால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட நீதிமன்றினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மூன்று வர்த்தமானி அறிவித்தல்களையும் மீளப் பெற்றுக்கொண்டு, நாடாளுமன்றில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பிரதமராக நியமித்து அமைச்சரவையையும் நியமிக்குமாறும் அநுரகுமார சிறிலங்கா ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு நியமிப்பதன் ஊடாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறும் ஜே.வி.பி யின் தலைவர் மைத்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைய ஜனாதிபதி மைத்ரி அவருக்குறிய இந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றாது தொடர்ந்தும் அகங்காரத்துடன் செயற்பட முற்படுவாரானால், அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவே முடியாத தோல்விகளை பெற்றுக்கொடுக்க ஜே.வி.பீ தயாராகவே இருப்பதாகவும் அநுரகுமார எச்சரித்துள்ளார்.
இதற்காக நாட்டு மக்களை அணி திரட்டி வீதிகளில் இறங்கி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தாங்கள் தயார் என்றும் ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடும் சவாலையும விடுத்திருக்கின்றார்.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவும் – ரணில் விக்கிரமசிங்கவும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டில் சூழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தை தீர்த்துக்கொள்ள சதி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டிய ஜே.வி.பி யின் தலைவர், இதற்கு தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பம் என்பது வெறுமனே தோற்றுவிக்கப்பட்டது ஒன்றல்ல என்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் துரோகம் விளைவித்த அரசியல் சதியை தோற்கடித்தே தீருவோம் என்றும் ஜே.வி.பி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.



No comments