தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நற்பெயருக்கும், அரசினது நலத்திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளை சிதைத்திடும் வண்ணமும் சமீபத...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நற்பெயருக்கும், அரசினது நலத்திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளை சிதைத்திடும் வண்ணமும் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிடக்கோரி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், விஜய் பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தார் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா.
இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான நிலையில், சர்கார் இயக்குனர் முருகதாஸ் தனது வீட்டின் கதவை காவல்துறையினர் தட்டியதாகவும், கைது செய்வதற்காக அவர்கள் வந்திருக்கக்கூடும் என ட்வீட் செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காவே முருகதாஸ் வீட்டிற்கு சென்றோம். கைது நடவடிக்கைக்காக அல்ல என விளக்கமளித்துள்ளது காவல்துறை.
முன்னதாக, அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறி மக்களை தூண்டிவிடுவதாக முருகதாஸ் மீது தேச துரோக பிரிவின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments